
அமெரிக்காவில் குழந்தையைப் பெற்றெடுத்து, அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காகப் பயணம் செய்வதே பிரதான நோக்கம் எனத் தூதரக அதிகாரிகள் தீர்மானித்தால், சுற்றுலா விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை, குழந்தைப் பிறப்பை நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதை “Birth Tourism” (பிறப்புச் சுற்றுலா) எனக் குறிப்பிடுகிறது. இது B வகை பார்வையாளர் விசாவைப் பெறுவதற்கான அனுமதிக்கப்பட்ட நோக்கம் அல்ல.
அமெரிக்க விசா விதிகளின்படி, விண்ணப்பதாரர் அமெரிக்காவுக்குச் செல்வதன் பிரதான நோக்கம் குழந்தையைப் பெற்றெடுத்து அதன் மூலம் அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவதாக இருக்கலாம் எனத் தூதரக அதிகாரிகளுக்கு நியாயமான காரணம் இருந்தால், B வகை விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும்.
இந்தக் கொள்கை, B வகை குடியேற்றமற்ற விசாக்களை நிர்வகிக்கும் விதிமுறைகளில் 2020 ஜனவரியில்அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், அமெரிக்க விசா வழங்கப்பட்டிருப்பது மட்டுமே அந்த நாட்டிற்குள் நுழைவதற்கான உத்தரவாதம் அல்ல என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவை அடையும் போது, U.S. Customs and Border Protection (CBP) அதிகாரிகளே இறுதி நுழைவு அனுமதியைத் தீர்மானிப்பார்கள்.
அனுமதிக்கப்பட்ட சுற்றுலா அல்லது தற்காலிகப் பயண நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக பார்வையாளர் விசாக்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.





