
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களை துப்பாக்கி சூடு நடாத்தியாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் மகேஷ் கடற்படையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீவகப் பகுதிகளில் அண்மைக்காலங்களாக இந்திய இழுவைமடிப் படகுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அதனால் எமது கடற்தொழிலாளர்களின் பெருந்தொகையான வலைகள், உடைமைகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
நாங்களும் எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ மகஜர்கள் கையளித்தும் , சொல்லொண்ணாத் துயரங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம், சகல தரப்பினருக்கும் முறையிட்டும், அது இன்னும் நிறுத்தப்பட்டதாக இல்லை.
முதலமைச்சர் விஜய் பொறுப்பெடுத்த பிறகு, ஏதாவது கட்டுப்பாடு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் அதிகமான எங்களது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றனர்.
மன்னாரில் ஒரு படகு கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறது. அது எங்களுக்குத் திருப்தியாக இல்லை. 1000 படகு வரும்போது ஒன்றை கைது செய்வதனால் எந்தத் தீர்வும் காண முடியாது.
கடற்படையினரிடம் நாங்கள்கோருவது, நீங்கள் எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகம் செய்தாவது இந்தப்படகுகளை நிறுத்துவதற்குரிய வழிகளைச் செய்யுங்கள். தொடர்ந்து கேட்டுக்கொண்டு கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது.
ஏனென்றால், இந்திய மீனவர்களோடு பேசுவதாலையோ அல்லது இந்திய அரசாங்கத்தோடு பேசுவதாலையோ எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் பேசிப் பேசியே எங்களது மக்களை ஏமாற்றி, எங்களது வளங்களையும் சூறையாடி, எங்களையும் அழித்து… இன்றைக்கு கடற்றொழில் சமூகம் பெருந்துயரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
ஆகையால், இதற்குக்கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கடற்படைக்கும், ஜனாதிபதிக்கும் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.
எங்களுடைய 117 சங்கங்களும், சமாசச் சம்மேளனங்களும் கடற்படைக்கு நன்றியுடையவர்களாகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடியவர்களாகவும் நாங்கள் என்றைக்கும் இருப்போம் என தெரிவித்தார்.





