இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விரைவில் ஓய்வூதியம்; திட்டத்தை அமல்படுத்த இலங்கை ஜனாதிபதி உத்தரவு

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு அடிப்படையிலான (Contributory) ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நிலுவை பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து, அதை இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட (Budget) முன்மொழிவுகளில் இணைக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிற்கு மிகப்பெரிய அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டித் தருபவர்கள் என்பதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நிலையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அவசியம் என வலியுறுத்தினார்.

இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2026 வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற ஆய்வு மற்றும் 2027 முன்-வரவு செலவுத் திட்ட கலந்துரையாடலில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துகொண்டபோதே இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

மேலும், ஜனாதிபதி பல முக்கிய விடயங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்:

  • சுற்றுலா நிதி: சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி நேரடியாக மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் ஒருங்கிணைப்புடன் விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஒருங்கிணைந்த அபிவிருத்தி: சிகிரியா, காலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளும் திட்டங்கள், சுற்றுலா அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் இணைந்து செயல்படுத்தப்படும்.
  • கொள்வனவு நடைமுறை: நிதி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொள்வனவு நடைமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்திலேயே திட்டங்களை ஆரம்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா கட்டுமானம் போன்ற சிறப்பு திட்டங்களுக்கு தனித்துவமான நடைமுறைகளும் அமுல்படுத்தப்படும்.
  • சுற்றுலா மேம்பாடு: ஆசிய ஒலிபரப்பாளர்கள் மாநாடு (Asian Broadcasters’ Conference) உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதுடன், தூதரக சேவைகளை மேம்படுத்த டிஜிட்டல் விவகார அமைச்சுடன் இணைந்து மின்னணு மயமாக்கல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
  • சொத்து அறிக்கை: சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்த முழுமையான அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை விரைவாக நிறைவு செய்யுமாறு உத்தரவிட்டார்.
  • தொழிலாளர் பயிற்சி: 2030ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறைக்கு சுமார் 8 இலட்சம் பணியாளர்கள்தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், ஹோட்டல் பாடசாலைகள் ஊடாக தொழில்பயிற்சி திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button