
2026 முதல் அரையாண்டில் சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கைகள் 16% வீழ்ச்சி அடைந்துள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுவிட்சர்லாந்தில் 9,734 பேர் புகலிடக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இது, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் குறைவாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை 2026 ஜூன் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் 1,777 புகலிடக் கோரிக்கைகள் (Asylum Applications) பதிவாகியுள்ளதாக அந்நாட்டு குடிவரவு தொடர்பான மாநிலச் செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 20% குறைவாகவும், ஆனால் இந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 9% அதிகமாகவும் உள்ளது.
தெற்கு இத்தாலி வழியாக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்ததும், துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்களின் புகலிட விண்ணப்பங்கள் குறைந்ததும் இந்த சரிவுக்கான முக்கிய காரணங்களாக SEM குறிப்பிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் அதிகளவில் புகலிடக் கோரிக்கை செய்தவர்கள்:
- ஆப்கானிஸ்தான் – 456 பேர்
- எரித்திரியா – 222 பேர்
- அல்ஜீரியா – 175 பேர்
- துருக்கி – 140 பேர்
- சோமாலியா – 139 பேர்
அதே மாதத்தில், 2,235 புகலிட விண்ணப்பங்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டது.
மேலும், ஜூன் மாதத்தில் 872 பேர் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறினர். அவர்களில் 527 பேர் தாமாகவே வெளியேறியதுடன், 345 பேர் தங்கள் சொந்த நாடுகளுக்கோ அல்லது மூன்றாவது நாடுகளுக்கோ அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர்.





