
உலக நாடுகள் உரையாடல் மூலம் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) வலியுறுத்தியுள்ளார்.
பெய்ஜிங் நகரில் நடைபெற்ற நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தின நிகழ்வில் காணொளி வாயிலாக உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர், வெவ்வேறு நாகரிகங்கள் இடையே சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர கற்றலை அடிப்படையாகக் கொண்டு ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்றும், மனிதகுலத்தின் பொதுவான எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
நாகரிகங்களுக்கிடையேயான பரிமாற்றங்களை வலுப்படுத்த நான்கு அம்ச அணுகுமுறையை சீனா முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதில் மக்கள் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை, பாரம்பரிய கலாச்சாரத்தின் புதுமை, தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் சர்வதேச உரையாடல் தளங்களை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
மேலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாகரிக பரிமாற்றங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும், ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





