இந்தியா

மறைந்த பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை – முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

 

 

 

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

 

 

 

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று (10) அதிகாலை காலமானார்.

 

 

 

திரையுலகப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்து அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

 

 

 

சென்னை நீலாங்கரையில் பாரதிராஜாவின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் விஜய், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

 

 

மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை சுஹாசினி, நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

 

 

 

இந்நிலையில், பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

 

 

 

இதுபற்றி முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா.

 

 

 

தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

 

 

 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button