
கங்காராம விகாரையின் கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கங்காராம விகாரை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வையும் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.
பிலியந்தலை தர்ம சாஸ்த்ரோத பிரிவென் விகாரையில் நேற்று (31) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ சர்வஜ்ஞ தாது (புனித சின்ன) கண்காட்சியின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் கலந்துகொண்டார். அவ்விகாரைக்கு வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, விகாராதிபதி தேரரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர், தர்மசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித தாதுக்களைத் தரிசித்தார். அதன் பின்னர், பொதுமக்களும் அப்புனித சின்னங்களை வழிபடும் வகையில் புனித சின்னக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.
இதனை அடுத்து, மாதின்னாகொட ஸ்ரீ சுரம்யாராம விகாரையின் விகாராதிபதி தொடங்கொல்லே பஞ்ஞானந்த தேரரின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கொட்டிகாவத்தை – முல்லேரியாவை வெசாக் வலயத்தினையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில், யமா மகா பெலஹரையை மையமாகக் கொண்டு, கொட்டிகாவத்தை – முல்லேரியாவை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணத்தைப் பிரதமர் ஒளியேற்றி ஆரம்பித்து வைத்தார். ஐக்கிய வர்த்தக சங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வுடன், கொலன்னாவை இளைஞர் பௌத்த சங்கமும், கொலன்னாவை கிழக்கு மற்றும் மேற்கு சாசன பாதுகாப்பு மன்றங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பௌத்த பக்திப் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில் மகாசங்கத்தினர், அமைச்சர்களான வசந்த சமரசிங்க, சுனில் வடகல, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, வெளிநாட்டுத் தூதுவர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்





