
தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுவாக வீட்டுவசதி அதிகார சபையின் நிலக் கொள்கையின்படி, நாட்டில் வாழும் குறைந்த வருமானம் பெறும் ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு ஒரு காணி மாத்திரமே வழங்க முடியும் என்ற கடுமையான சட்ட விதிமுறை நடைமுறையில் உள்ளது.
ஆனால், கடந்த 1999 ஆம் ஆண்டில் அப்போதைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு ஏக்கர் அரச நிலம் தாராளமாக வழங்கப்பட்டுள்ளது எனச் சுதத் பலகல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவர் ஒன்றும் காணி இல்லாத, குறைந்த வருமானம் பெறும் ஏழை என்று நான் நினைக்கவில்லை” என அவர் சபையில் சாடியுள்ளார்.
அதேபோன்று, மஹிந்தவின் மனைவிக்கும் அவர்களின் ஆட்சிக் காலத்தில், பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி ‘கார்டன் மொண்டிசோரி’ என்று கூறப்படும் இடத்துக்கு மற்றொரு பெறுமதிமிக்க அரச நிலம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த நிலத்திற்கு மேலதிகமாக, அதனைச் சுற்றியிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான மேலும் சில பகுதிகளும் அவர்களால் அத்துமீறிப் பலாத்காரமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.





