உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே வரலாற்று ஒப்பந்தம்? : ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கா, ஈரான் மற்றும் இதர பிராந்திய நாடுகளுக்கு இடையில் முக்கியமான ஒப்பந்தம் ஒன்று பெருமளவில் பேசி முடிக்கப்பட்டு, தற்போது இறுதி வடிவத்தைப் பெறும் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த உடன்படிக்கையின் இறுதி அம்சங்கள் மற்றும் விபரங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் “மிகவும் சாதகமான” தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சனிக்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கை, ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை “முற்றிலும் தடுக்கும்” எனவும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

 

இதனிடையே, ட்ரம்பின் கருத்துகள் குறித்து கருத்து வெளியிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி, கடந்த வாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானின் நிலைப்பாடுகள் பரஸ்பரம் நெருங்கியுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

 

எனினும், முக்கிய பிரச்சினைகளில் முழுமையான உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக இதனை கருத முடியாது என்றும், அமெரிக்க தரப்பிலிருந்து முரண்பாடான அறிக்கைகள் வெளியாகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதேவேளை, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தெஹ்ரான் நகரில் ஈரானிய தலைமையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் “அதிக பலனளிப்பதாக” அமைந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த இராஜதந்திர நகர்வுகள் மூலம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான “முற்போக்கான முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button