
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (19) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட, அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பின்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இதேவேளை இப்பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
அதபோல் வட மாகாணத்திலும், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.





