
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகமானது108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளதுடன், தமிழக முதலமைச்சராக விஜயும் பதவியேற்றுள்ளார்.
இந்தநிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த முதலமைச்சர் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதனால் அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதனால் காலியாகியுள்ள அந்த ஒரு இடத்திற்கான புதிய நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழக சட்டசபையில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதால், வெற்றிடமாகும் அந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தமிழக வெற்றிக் கழகத்துக்கே கிடைக்கவுள்ளது.
இதன் மூலம், சட்டமன்ற தேர்தலில் வென்ற கையோடு நாடாளுமன்றத்திலும் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தடத்தைப் பதிக்கவுள்ளது.
இந்த முக்கிய பதவியை தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் சட்டமன்ற என்ற அடையாளத்துடன் டெல்லி செல்லப்போகும் அந்த முக்கிய நிர்வாகி யார்? என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்துள்ளது.




