
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு எமது சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளை, அவரிடம் விநயமாக சில கோரிக்கைகளையும் முன்வைக்க விரும்புகின்றோம்.
தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் எமது கடல் வளங்களை அழிப்பதுடன், எமது கடற்றொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகளையும் நாசம் செய்துள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் கடற்றொழில் தடைக்காலம் அமுலில் உள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதியுடன் அந்தத் தடைக்காலம் நிறைவடைவதாக அறிகிறோம்.
எனவே, தடைக்காலம் முடிந்த பின்னர் எமது கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தமிழக புதிய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்





