இலங்கை

இந்தியா – இலங்கை இடையே தரைப்பாலம் : பொருளாதாரத்தை மாற்றப்போகும் மெகா திட்டம்!

இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள தரைப்பாலம் மூலம் இலங்கைக்குப் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள புதிய கொள்கை விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய-இலங்கை தரைவழி இணைப்பை மதிப்பிடுதல் என்ற தலைப்பிலான இந்த ஆய்வில், வலுவான தரைவழித் தொடர்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிராந்திய வளர்ச்சியை முற்றிலும் மாற்றியமைக்கும் என வாதிடப்பட்டுள்ளது

முன்னதாக கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தரைவழித் தொடர்பு இல்லாததை ஒரு “முரண்பாடு” எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்தத் திட்டத்தின் பின்னாலுள்ள பொறியியல் மற்றும் வணிக ரீதியான காரணங்கள் மிகவும் அழுத்தமானவை எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

இதன் மூலமே இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் அமைக்கப்படும் நிலையான சாலை மற்றும் தொடருந்து இணைப்பு, பயண மற்றும் போக்குவரத்து நேரத்தை கணிசமாகக் குறைக்கும்.

 

தற்போது கப்பல் போக்குவரத்து செயல்முறைகள் மற்றும் துறைமுகத் தாமதங்கள் காரணமாக கடல் வழியே சரக்குகளைக் கொண்டு செல்ல 40 முதல் 122 மணித்தியாலங்கள் வரை ஆகிறது.

 

ஆனால், முன்மொழியப்பட்டுள்ள தரைவழிப் பாதை மூலம் இந்தச் சரக்கு போக்குவரத்தை அதிகபட்சமாக 9 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய முடியும்.

இந்தியாவின் கேரளாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட பிராந்தியப் போட்டிகளுக்கு மத்தியில், இந்த தரைப்பாலம் கொழும்பு துறைமுகத்தின் போட்டித்திறனை மேலும் உயர்த்தும்.

 

நேரடி தரைவழித் தொடர்பானது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மாற்றியமைக்கும்.

 

2034ஆம் ஆண்டளவில் ஒரு டிரில்லியன் டொலர் பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்துடன் இந்த மாகாணங்களின் வணிகங்கள் நேரடியாக இணைவதற்கும், பிராந்திய தொழில் வளர்ச்சிக்கும் தரைப்பாலம் வழிவகுக்கும்.

 

குறைந்த செலவிலான தரைவழி அணுகல் காரணமாக தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 

இது பின்தங்கிய பிராந்தியங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.

 

இந்தத் திட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்களை பட்டியலிட்டுள்ள மாற்றுக்கொள்கைக்கான அறிக்கை, சில முக்கிய எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.

 

பாக்கு நீரிணை மற்றும் ஆதாம் பாலம் (ராமர் பாலம்) ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் வனவிலங்கு வாழ்விடங்களையும் கொண்டுள்ளன.

 

எனவே, இந்தத் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு முன்னர் விரிவான சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button