
கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிலவும் அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து உடனடியாகக் கண்டறிந்து, விநியோக மற்றும் சேவைத் தொகுதிகளை அவசரமாக மீளாய்வுக்கு உட்படுத்துமாறு சுகாதாரப் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட முகாமைத்துவ கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதன்மையான மற்றும் பிரதான பரிந்துரை மருத்துவமனையாக விளங்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நோயாளர் பராமரிப்புச் சேவைகளைப் பாதிக்கும் பல்வேறு சவால்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது அத்தியாவசிய மருந்துகளுக்கு நிலவும் தொடர்ச்சியான தட்டுப்பாடு,மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதங்கள்,ஊழியர் பற்றாக்குறை மற்றும் நிர்வாக ரீதியான குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இவ்வாறான காரணிகளால் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளின் வினைத்திறன் பெருமளவில் பாதிக்கப்படுவதாகச் சுகாதார வல்லுநர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், கடந்த வருடங்களை விட இவ்வருடம் மருந்துப் பொருட்கள் மற்றும் அவசரகாலக் கொள்வனவுகளுக்கான ஒதுக்கீடுகள் பாதீட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மருத்துவமனை அமைப்பிற்குள் விநியோகத் தடங்கல்கள் இன்னும் பதிவாகி வருவதை ஒப்புக்கொண்டார்.
எனவே, மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் மற்றும் விநியோகிக்கும் வழிமுறைகளில் எங்கு இடைவெளிகள் காணப்படுகின்றன என்பது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் கட்டளையிட்டார்.
இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையின் முதன்மை நிறுவனமாக விளங்கும் கொழும்பு தேசிய மருத்துவமனை, நிலையான சேவைத் தரத்தையும் நோயாளர் பாதுகாப்பையும் பேண வேண்டியது கட்டாயமாகும் எனப் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இவ்வாறானதொரு முக்கிய மருத்துவமனையில் காணப்படும் முறையான பலவீனங்கள், ஒட்டுமொத்த பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என அவர் எச்சரித்தார்.
“தேசிய மருத்துவமனை என்பது மிக உயர்ந்த தரத்திலான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புடன் கூடிய, முழுமையான வினைத்திறனுள்ள ஒரு முன்மாதிரி நிறுவனமாக இயங்க வேண்டும். இதற்கான பொறுப்பு அனைத்து மட்ட ஊழியர்களுக்கும் கூட்டாக உள்ளது” எனத் தெரிவித்த அவர், இதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்





