
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடிப் தொடர்பு இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், இஸ்ரேலுடனான தனது உறவை அமீரகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இந்த அதிரடி கருத்துக்களை வெளியிட்டார். இது குறித்து அவரது உத்தியோகபூர்வ டெலிகிராம் கணக்கிலும் பதிவிடப்பட்டுள்ளது.
“எனது நாட்டுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாக ஈடுபட்டுள்ளது என்பதை நான் கூற வேண்டும். எமக்கு எதிராக பீரங்கித் தாக்குதல்களை நடத்தவும், இராணுவ உபகரணங்களைப் பயன்படுத்தவும் அவர்கள் தமது நிலப்பரப்பை அனுமதித்துள்ளனர்,” என அரகச்சி தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் ஏற்படுத்திக்கொண்ட உறவை அவர் கடுமையாகச் சாடினார்.
“இஸ்ரேலியர்களுடனான உங்கள் கூட்டணி உங்களுக்குப் பாதுகாப்பை வழங்கவில்லை. எனவே, ஈரான் தொடர்பான உங்கள் கொள்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்,” என அவர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.





