
சீனாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-டெ, ஆபிரிக்க நாடான எஸ்வாட்டினிக்கு (Eswatini) திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
எஸ்வாட்டினி மன்னர் மூன்றாம் ம்ஸ்வாதி (Mswati III) அரியணை ஏறியதன் 40ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காகவே இந்த திடீர் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாய்வான் ஜனாதிபதி இந்தப் பயணத்தைத் தடுப்பதற்குச் சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாகத் தாய்வான் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, ஏனைய நாடுகள் தாய்வானுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது
இந்த நிலையில், தாய்வான் ஜனாதிபதியின் இந்தப் பயணம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனத் தரப்பு, “அவரது செயல்பாடு தெருவில் ஓடும் எலியைப் போன்றது” எனத் தெரிவித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இதற்குப் பதிலளித்த தாய்வானின் பெருநில விவகார சபை (Mainland Affairs Council), எங்கும் செல்வதற்குப் பெய்ஜிங்கின் அனுமதி தங்களுக்குத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
தாய்வானுடன் முழுமையான தூதரக உறவைக் கொண்டுள்ள உலகின் 12 நாடுகளில் எஸ்வாட்டினியும் ஒன்றாகும்.
இதேவேளை, தாய்வானுக்கு உலக நாடுகளுடன் தொடர்புகொள்வதற்கான உரிமை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், தாய்வான் ஒரு தனி நாடு என்பதை இலங்கை அரசின் ‘ஒரே சீனா கொள்கை’ ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





