
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளன.
இதன்படி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் அவசியமற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நிலைமை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இலங்கைத் தூதரகங்கள் அவ்வப்போது வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து நேரங்களிலும் தொலைபேசிகளை முழுமையாக மின்னேற்றம் (Charge) செய்து வைத்திருப்பதுடன், அவசியமான அடையாள ஆவணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏதேனும் அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் அல்லது மேலதிக விபரங்களுக்குப் பின்வரும் இலக்கங்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1. ஜோர்டான் நாட்டில் உள்ளவர்களுக்காக (இலங்கைத் தூதரகம், ஜோர்டான்):
அவசர அழைப்பு (Hotline): 00962 777313323
தற்காலிக தூதரகப் பொறுப்பாளர்: 00962 781365773
கொன்சுலர் அதிகாரி: 00962 781548585
மின்னஞ்சல்: [email protected]
2. பொதுவான அவசரத் தொடர்புகள் (இலங்கை):
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு (கொன்சுலர் பிரிவு): +94742595546
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE): +94719802822
24 மணிநேர அவசர அழைப்பு இலக்கம்: 1989
பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களும் 24 மணிநேரமும் அவசர சேவைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.





