
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அரச இயந்திரம் உரியவாறு மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், இயற்கை அனர்த்தத்தால் காணாமல் போனவர்களை தேடும் பணிகளுக்கு சர்வதேச ரீதியில் நிபுணத்துவம் கொண்டவர்களை அழைப்பதற்கான எவ்வித தேவையும் இல்லை என, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
எனினும், காணாமல் போனோரைத் தேடுவதற்கு சர்வதேச நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அலுவலக உத்தியோகத்தர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவல்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்திற்குப் பொருத்தமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார்.
தமது அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாத்திரமே இயலுமை உள்ளதாகவும் மகேஸ் கட்டுலந்த குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாடு கடினமான நிலையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, தமது தனிப்பட்ட அபிப்பிராயங்களை வெளியிடுவது பொருத்தமற்ற செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதைய நிலையில் அரசாங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தமது அலுவலகம் தயாராக உள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த சுட்டிக்காட்டியுள்ளார்.





