அரசியல்இலங்கை

பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”

இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தங்காலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, நுகேகொடை பேரணி, போதைப்பொருள் வியாபாரிகளைப் பாதுகாக்கவே நடத்தப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். இது என்ன முட்டாள்தனம்?

நுகேகொடை பேரணியில் யாராவது போதைப்பொருட்களுக்கு ஆதரவாகப் பேசினார்களா? இந்த அரசு பயந்துவிட்டது. ஒவ்வொரு கூட்டத்திலும் எதிர்க்கட்சிகளைப் போதைப்பொருள் ஆதரவாளர்கள் என்று அரசு குற்றம் சாட்டுகின்றது.

இப்போது மக்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. ஜனாதிபதி கூறிய பொய்களை மக்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் மக்கள் இப்போது இந்த அரசுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.

ஜனாதிபதி கூறிய பொய்கள் நிறையவே உள்ளன. அவர் 14 மாதங்களாக பொய்களை மட்டுமே கூறி வருகின்றார். நான் அவருக்கு இன்னும் 14 மாத அவகாசம் தருகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி கூறிய இந்தப் பொய்களுக்கு நாட்டு மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button