
புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்தை கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது.
உலகளாவிய அளவில் மனிதர்களை அச்சுறுத்தும் கொடிய புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் ஆண்டாண்டு காலமாக ஆராய்ச்சிகள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
புற்றுநோய் செல்களைக் கொல்லும் இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
வெர்னோனியா ஜெய்லானிகா,நிஜெல்லா சாடிவா,ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ்,லூகாஸ் ஜெய்லானிகா மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா (Smilax glabra) ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடும் என்று பேராசிரியர் சமீர ஆர். சமரக்கோன் உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.
உயிர்கொல்லி நோயான புற்றுநோய்க்கு என்டோரோமைக்ஸ் எனப்படும் வெற்றிகரமான தடுப்பூசியை தயாரிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக அண்மையில் ரஷ்யா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





