இலங்கை

ஐ.நா. ஆணையாளருக்கு இலங்கையில் இருந்து சென்ற அவசர அறிக்கை

அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் தமிழ், மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க எம்மை நாமே ஆளக்கூடிய பொது வாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கின்றோம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆணையாளருக்கு, வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச நீதி வேண்டியும், இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை முற்றாக நிராகரித்தும், செம்மணி மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் விவகாரத்திற்கு காலம் தாழ்த்தாது விரைவான சர்வதேச சிறப்பு சுயாதீன விசாரணை ஆணையத்தை நியமித்திட கோரியும் குறித்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணியிலும், கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் இப்போராட்டத்தின் ஊடாக சர்வதேசத்தின் கவனத்திற்கு எங்கள் கோரிக்கையை வெளியிடுகின்றோம்.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்றாகும். தாயகத்தில் அதிகளவான சிறுவர், குழந்தைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் 350 இற்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச நீதி கோரி போராடி நீதி கிடைக்காமலே மன உளைச்சலில் இறந்துள்ளனர்.

ஐ நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திவந்த முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளில் இருந்தும் பெற்றுக்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளது. இதனை தவறவிடக்கூடாது என வலியுறுத்தி கூறியுள்ளார். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் அனைத்து வகையான உள்நாட்டு பொறிமுறை மற்றும் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஆகியவற்றை நாம் முற்றாக
நிராகரிக்கின்றோம்.

சர்வதேச நீதிப்பொறிமுறைகளில் மட்டுமே நாம் நம்பிக்கை வைக்கின்றோம். சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, சர்வதேசப் பொறிமுறையை நாம் கோருகின்றோம். தற்போதைய அலுவலக கருத்திட்டம் தரமுயர்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வரும் இன அழிப்பு தொடர்பான விசாரனையை மேற்கொள்ள பன்னாட்டு நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டும். 2002 ஜூலை 01 ஆம் நாளுக்கும் காலத்தால் முற்பட்ட குற்றங்களை விசாரிக்கும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு முற்பட்ட காலங்களுக்கு விசாரணை மேற்கொள்ள முடியாதவிடத்து இலங்கை தொடர்பான சிறப்புச் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்தி இனவழிப்பு உள்ளிட்ட குற்றவியல் பொறுப்புக்கூறலுக்கான சட்ட நடவடிக்கைஅவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட வேண்டும். மனிதப் புதைகுழிகள் பற்றிய கண்துடைப்பு விசாரணைகளை ஸ்ரீலங்கா அரசு நிறுத்தி சர்வதேசத்தின் கண்காணிப்பில் நடைபெறவேண்டும் என கோருகின்றோம். வலிந்து கணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? அவர்களுக்கான சர்வதேச நீதி வேண்டி 3146 நாட்கள் தொடர்ச்சியாக வீதிப் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். அவர்களுக்கான சர்வதேச நீதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடராது நிறுத்த பின்வருவன தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

1) அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

2) ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

3) ஊடகவியலாளர்கள் தமது சுயாதீனமான ஊடகப்பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

4) சிங்கள குடியேற்றம் பொளத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்

5) தமிழர் தாயகப் பரப்பில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.

6) மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், நீதி வேண்டி போராடுபவர்கள் மீது புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்

7) எமது தேசத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்

8) எமது வளங்கள் சுரண்டப்படுவதை உடன் நிறுத்தப்பட வேண்டும்.

9) பயங்கரவாத தடுப்பு சட்டம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்

இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழருக்கான தனித்துவமான இறையாண்மைக்குரிய தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அனைத்துலக சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் நிறைந்த அரசியல் தீர்வு குறிப்பிட்ட கால நிர்ணயத்திற்குள் காணப்படவேண்டும். இயலாதவிடத்து விரைவாக அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் தமிழ், மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க எம்மை நாமே ஆளக்கூடிய
பொது வாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கின்றோம்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button