
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த நாடாளுமன்ற செயலாளர்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையை தயாரித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர துணை செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவி செயலாளர் நாயகம் ஹன்சா அபேரத்ன ஆகியோர் கையொப்பமிட்டனர்.
அறிக்கை குறித்த தனது முடிவை சபாநாயகர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஓகஸ்ட் 12 ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர, தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பது, அத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





