
ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அம்பாறை தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த அகழ்வு பணியானது கருணா – பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று(28) மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி. தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டன.
கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா – பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டிருந்தார். அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவர் கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி குற்றப்பலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
அதன் அடிப்படையில் குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் பொலிஸார் என பலரும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.





