
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன்படி, மீண்டுமொரு தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னர் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் எனக் குறித்த பங்காளி கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவுவதாகக் கூறப்படும் முறுகல்கள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது கருத்துரைத்த சஜித் பிரேமதாச பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்பட்டாலும் அது தம்முடைய எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் அப்போதும், தாமே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




