
வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்ற நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஆலயத்திற்கு செல்லும் சைவ பக்தர்களுக்கு பொலிஸார் இடையூறை ஏற்படுத்தாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சனிக்கிழமை (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.
அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மறிக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லவே அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன் உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.





