
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது.
இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக் கட்டமைப்புகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ள பொதுவான அபாயம் என்று அதன் தலைவர் கலாநிதி சனத் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் அவர் கூறுகிறார்.
மீன் உற்பத்தி குறைவடைந்தமைக்குக் குறிப்பிட்ட எந்தவொரு காரணமும் தாக்கம் செலுத்தவில்லை எனவும், உயிரியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே பிரதான காரணமாகியுள்ளன எனத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இதற்காக எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை குறிப்பாக அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், அதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நெருக்கடி நீண்டகாலமாக வளர்ச்சியடைந்தால் மீனவ மக்களின் ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை வேறு தொழிலவாய்ப்புகள் நோக்கி மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நிலவும் நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய மீனவக் கூட்டுறவு இயக்கத்தின் அழைப்பாளர் ஹர்மன் குமார, மீன்பிடி நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் அழிவுகரமான உபகரணங்களின் பயன்பாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை இந்த மீன்வளம் நசிந்துபோவதற்குப் பிரதான காரணமாக மாறியுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.





