
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன இன்று காலை அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
1986 ஆம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்ததுடன் பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சி.டி. விக்ரமரத்னின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ASP வூட்லர் குறிப்பிட்டார்.
மேலும், பிரேதப் பரிசோதனை மற்றும் மரண விசாரணை (Magisterial Inquiry) நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பாக சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த மரணத்தைச் சூழ்ந்துள்ள அனைத்து சூழ்நிலைகளையும் முழுமையாக ஆராயும் பொறுப்பு, நியமிக்கப்பட்டுள்ள இரு பொலிஸ் விசாரணைக் குழுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.






