
மத்திய கிழக்கில் உள்ள மேலும் பல எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி வழித்தடங்களை முடக்கத் தயாராக இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா ஈரானின் இராணுவ இலக்குகள் மீது புதிய சுற்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா தனது “ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை” நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடருமானால், மத்திய கிழக்கில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்குப் பயன்படுத்தப்படும் பிற முக்கிய கடல்வழிகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்து புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும்.
இதற்கிடையில், அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை அச்சுறுத்த பயன்படுத்தப்படும் ஈரானின் இராணுவ திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் இந்த புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் இராணுவ உள்கட்டமைப்புகள், ஏவுகணை களஞ்சியங்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் இலக்காகக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமல்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தும் கணிசமாகக் குறைந்துள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அண்மைய அமெரிக்க தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், சுமார் 260 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் தனியாகக் கூறியுள்ளனர்.





