உலகம்சர்வதேசம்

ஆகஸ்ட் முதல் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க OPEC+ நாடுகள் அதிரடித் தீர்மானம்

சர்வதேச அளவில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளின் கூட்டமைப்பான OPEC+, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தங்களின் நாளாந்த எண்ணெய் உற்பத்தி இலக்கை மேலும் 188,000 பீப்பாய்களால் அதிகரிக்கக் கொள்கை அளவில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்ற நிலைமைகள் தணிந்து, மசகு எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு வருவதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் பின்னணியில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

OPEC+ அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடத்திய இணையவழி ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் இந்தத் தகவல் கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல் நாளாந்த மசகு எண்ணெய் உற்பத்தியை 188,000 பீப்பாய்களால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற உற்பத்தி அதிகரிப்புகளின் தொடர்ச்சியாகும்.

சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட OPEC+ அமைப்பின் 7 முக்கிய உறுப்பு நாடுகள், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் தங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி ஒதுக்கீட்டை ஏற்கனவே சுமார் 800,000 பீப்பாய்களால் அதிகரித்திருந்தன.

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் யுத்தம் காரணமாக, சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஈராக் போன்ற உலகின் பிரதான எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால், OPEC+ நாடுகள் உற்பத்தியை அதிகரித்திருந்தாலும், அவற்றைப் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் போனது.

இதன் விளைவாக, கடந்த பெப்ரவரி மாதத்தில் தினசரி 42.77 மில்லியன் பீப்பாய்களாக இருந்த OPEC+ நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி, மே மாதத்தில் 33.13 மில்லியன் பீப்பாய்களாகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டது.

எவ்வாறாயினும், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மாற்று வழிகளில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக, ஜூன் மாதம் முதல் உற்பத்தி மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

யுத்தக் காலத்தில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 120 அமெரிக்க டொலர்களைக் கடந்து உச்சம் தொட்டிருந்தது. எனினும், தற்போது நிலைமைகள் சீராகி வருவதாலும், சீனாவின் மசகு எண்ணெய் இறக்குமதி குறைந்ததாலும், சர்வதேச எரிசக்தி முகமையின் அவசர எண்ணெய் இருப்பு வெளியீடு போன்ற காரணங்களாலும் விலை பெருமளவு குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 72 அமெரிக்க டொலர்கள் என்ற போருக்கு முந்தைய விலை மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button