
இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த யோஷித ராஜபக்ஷவை நிறைவேற்றுப் பிரிவின் அதிகார உத்தியோகத்தராக ஆட்சேர்ப்பு செய்தமை மற்றும் அன்றைய நடைமுறைகளுக்குப் புறம்பாக அரசாங்கப் பணத்தைச் செலவழித்து பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியின் பயிற்சிப் பாடநெறியொன்றில் அவர் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை ஆகியன தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இன்று (3) முற்பகல் 10.05 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது விசாரணை அதிகாரிகளினால் ஆணைக்குழு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது





