
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தீவிர மோதல் வெடித்தையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் நேற்று (19) நடைபெறவிருந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பின்னா், அமெரிக்கா, ஈரான், கட்டார். ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.
அமெரிக்கா-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 14 அம்சங்கள் கொண்ட முதல்கட்ட அமைதி ஒப்பந்தம் இருதரப்பினாலும் அண்மையில் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டது. இதில் முதல் அம்சமாக லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இச்சூழலில், தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் இஸ்ரேல் வியாழக்கிழமை இரவு முழுவதும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், தெற்கு லெபனானின் நபதியா நகருக்கு அருகே இஸ்ரேல் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு லெப்டினன்ட் கர்னல் உள்பட 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், நபதியா நகரைக் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ள அலி அல்-தாஹெர் மலையை இஸ்ரேல் கைப்பற்ற முயன்றதால்தான் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில் லெபனானில் அமைதி திரும்பும்வரை ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ஈரான் அதிகாரிகள் தங்களின் பயணத்தை இரத்து செய்தனர். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் தனது பயணத்தை ஒத்திவைத்தார்.
மோதல் ஒருபுறமிருக்க, தெற்கு லெபனானின் பெரும் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதும் இந்த ஒப்பந்தத்தில் முக்கிய பிரச்சினையாகவுள்ளது. இதனால், அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.





