
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – நாவற்குழி பகுதியில் கடந்த மே 31ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் (LTTE) அமைப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடியதாகக் கூறி, கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில், சந்தேக நபர் அந்த இசை நிகழ்ச்சியிலிருந்து நான்கு பாடல்களைத் திருத்தி (edit செய்து), அவை விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாக அல்லது அந்த அமைப்பை ஆதரிக்கும் வகையில் சித்தரித்து தனது டிக் டாக் (TikTok) கணக்கில் பதிவேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
1978ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) 3(g) பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சந்தேக நபர் அவரது கைபேசியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து, அவரை வரும் 2026 ஜூன் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் சாவகச்சேரி தலைமையக பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.





