
யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும், நான்கு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த 27 ஆம் திகதி இரவு 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடற்றொழிலுக்காகச் சென்ற அவர்கள், இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கடற்றொழிலாளர்கள் பயணித்த திசைகள் குறித்த தகவல்களைக் கொண்டு, தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவல்களும் எமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, காணமல் போன கடற்றொழிலாளர்களை, தேடும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்துக்கு கடற்றொழில் அமைச்சர் ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, வான் படையின் உதவியுடனும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.





