
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இத்தகவலை வெளியிட்டுள்ளார்
பரீட்சை முடிவுகள் வெளியாகும் அதிகாரப்பூர்வமான மற்றும் திட்டவட்டமான திகதியை தற்போது துல்லியமாக அறிவிக்க முடியாது எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், திட்டமிட்டபடி ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்குள் முடிவுகளை வெளியிடுவதற்கான சகல ஆயத்தங்களையும் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்
.கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் நடாத்தப்பட்டன. இம்முறை பரீட்சைக்காக ஒட்டுமொத்தமாக 451,463 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில், பாடசாலை விண்ணப்பதாரர்கள் 382,249 பேரும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 69,214 பேரும் உள்ளடங்குவர்
பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனப் பரீட்சார்த்திகளும் பெற்றோர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





