
ஹஜ் பெருநாளை முன்னிட்டு குர்பான் கொடுக்கும் விவகாரத்தில் நிலவிய குழப்பங்களுக்குத் தீர்வு வழங்கியமைக்காக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அபேரத்ன மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகம் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை ‘வெசாக் வாரமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த காலப்பகுதியில் குர்பான் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் எனஅச்சம் நிலவியது.
எமது மார்க்க அனுஷ்டானங்களைச் செய்வதில் தடை ஏற்படுமோ என்ற கவலையில் முஸ்லிம் சமூகம் இருந்தது.
இருப்பினும், இது தொடர்பில் அமைச்சர் அபேரத்ன மற்றும் அரசாங்கம் மிகச் சரியான விளக்கத்தை அளித்துள்ளது.
வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டாலும், மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் மாதம் 01ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நேரடியான மற்றும் தெளிவான அறிவுறுத்தலானது முஸ்லிம் சமூகத்தின் மனதிலிருந்த பாரிய பாரத்தை நீக்கியுள்ளது
எமது மதக் கடமைகளைச் செய்வதற்கான உரிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக அமைச்சருக்கும் இந்த அரசாங்கத்திற்கும் நாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.





