
செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை இன்னும் துல்லியமாக மேம்படுத்துவதற்காக, தனது ஊழியர்களின் கணினி செயல்பாடுகளை ரகசியமாகப் பதிவு செய்யும் புதிய முறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘மொடல் கேபபிலிட்டி இனிஷியேட்டிவ்’ (MCI) எனப்படும் புதிய கண்காணிப்பு மென்பொருளை மெட்டா (meta) தனது அமெரிக்க ஊழியர்களின் கணினிகளில் நிறுவி வருகிறது.
இது ஊழியர்கள் மவுஸை நகர்த்துவது, அழுத்துவது மற்றும் விசைப்பலகையில் (Keyboard) தட்டச்சு செய்வதை அப்படியே பதிவு செய்யும்.
மனிதர்கள் கணினியை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை AI மொடல்களுக்குக் கற்றுக்கொடுப்பதே இதன் நோக்கம்.
குறிப்பாக, ஒரு மென்பொருளில் கீழ்விரிப் பட்டியல்களை (Drop-down menus) பயன்படுத்துவது மற்றும் குறுக்குவழி விசைகளை (Shortcuts) இயக்குவதில் AI-க்கு உள்ள தடுமாற்றங்களை நீக்க இது உதவும்.
ஊழியர்கள் வேலை செய்யும்போது அவர்களின் திரைகளை (Screens) அவ்வப்போது நிழற்படம் (Screenshot) எடுத்து, சூழலைப் புரிந்து கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தரவுகள் AI பயிற்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், ஊழியர்களின் பணி மதிப்பீட்டிற்காகப் பயன்படுத்தப்படாது என்றும் மெட்டா (meta) தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறினாலும், எத்தகைய தரவுகள் தவிர்க்கப்படும் என்பது குறித்த தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
மெட்டா (meta) தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க், நிறுவனத்தின் செயல்பாடுகளை AI-மயமாக்கத் தீவிரமாக முயன்று வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே பணியாற்றி வரும் மென்பொருள் பொறியாளர்களை AI பிரிவிற்கு மாற்றும் பணிகளும், மற்றொருபுறம் 10 சதவீத ஆட்குறைப்புத் திட்டங்களும் மெட்டாவில் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.





