
தனது பிரதேசம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு கட்டார் மீண்டும் ஒரு உத்தியோகபூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளது.
கட்டார் வெளியுறவு அமைச்சகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், கடந்த மார்ச் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை கட்டார் பிரதேசத்தை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆளில்லா வானூர்திகள் (Drones) மற்றும் கப்பல் ஏவுகணைகளைப் பயன்படுத்தி (Cruise Missiles) இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதில் கட்டார் கடல் பகுதியில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அல் ஜசீரா ஊடகம் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, ஈரானின் இந்த நடவடிக்கைகளை “சட்டவிரோத செயல்கள்” எனச் சாடியுள்ள கட்டார், இத்தாக்குதல்களால் ஏற்பட்ட அனைத்துச் சேதங்களுக்கும் ஈரான் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், சர்வதேச சட்டக் கோவைக்கு அமைவாக, தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இவ்வாறான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கவும் கட்டாருக்கு முழுமையான உரிமை உண்டு என்பதையும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கட்டார் மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த நேரடி மோதல் போக்கு பிராந்திய பாதுகாப்பில் மேலும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்





