
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் குறைந்தது 83 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
யுனிசெஃப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி முதல் இதுவரை 83 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 254 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் கடந்த வாரத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நாளொன்றுக்கு சுமார் 36 சிறுவர்கள் காயமடைந்து வருகின்றனர்.
கடந்த 28 மாதங்களில் மட்டும் லெபனானில் 329 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதோடு, 1,632 பேர் காயமடைந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
லெபனான் முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய இடம்பெயர்வு காரணமாக சுமார் 700,000 பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் சுமார் 200,000 சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது மிகவும் அச்சமளிப்பதாகத் தெரிவித்துள்ள யுனிசெஃப், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் பொதுமக்கள் மற்றும் பாடசாலைகள், தங்குமிடங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகளைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது.
சிறுவர்களுக்கு ஏற்படும் மேலதிக பாதிப்புகளைத் தவிர்க்க உடனடியாகப் போர் பதற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.





