
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம் கலந்த கொள்வனவு (Panic Buying) மற்றும் அது தொடர்பான சட்டவிரோத எரிபொருள் விற்பனைக்கு எதிராக காவல்துறை தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களில் பல கைதுகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் பதிவாகியுள்ளன.
கறுப்புச் சந்தை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும், பொது ஒழுங்கைப் பேணவும் நாடு முழுவதும் சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் புல்மோட்டை நகரில் உரிமம் இன்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (03) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புல்மோட்டை காவல்துறை நிலைய அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.
குறிப்பிட்ட கடையைச் சுற்றி வளைத்த அதிகாரிகள், அங்கிருந்து சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை, அர்பத் நகரைச் சேர்ந்த 36 வயதுடையவராவார், அவர் இன்று (04) குச்சவெளி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, அனுமதியின்றி 1,000 லிற்றர் டீசலை விற்பனை செய்தமை மற்றும் 412 லிற்றர் டீசலை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட டீசலை அரசுடைமையாக்குமாறும் கம்பஹா மேலதிக நீதிவான் தம்மிக உடுவவிதாரண நேற்று (03) உத்தரவிட்டார்.





