
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் இந்தியாவில் இருந்து களவாடப்பட்ட மூன்று வெண்கலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது.
இந்தச் சிலைகள் இந்திய ஆலயங்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டவை என்பது விரிவான ஆய்வுகளுக்குப் பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் கையளிக்கப்படவுள்ள சிலைகளில் நடராஜர் சிலை ஒன்று சோழர் காலத்தில், கிறிஸ்துவிற்கு பின்னர் 990 ஆம் ஆண்டை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோன்று சோமஸ்கந்தர் சிலை சோழர் காலம், 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மூன்றாவது சிலை சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் பரவை நாச்சியார் சிலை என்பன விஜயநகர காலத்தை சேர்ந்தது என்பதுடன் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த சிலைகளில் நடராஜர் சிலையை மட்டும் நீண்ட கால கடனாகத் தன்னிடம் வைத்திருக்க இந்திய அரசாங்கத்துடன் அருங்காட்சியகம் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சிலை எவ்வாறு கடத்தப்பட்டது மற்றும் எவ்வாறு மீட்கப்பட்டது என்ற முழு வரலாற்றையும் அருங்காட்சியகம் பொது மக்களுக்கு விளக்கவுள்ளது.
தெற்காசியக் கலைப் பொருட்கள் குறித்த தனது சேகரிப்புக்களை முறைப்படி ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட இந்த மூன்று சிலைகளின் பின்னணியில் வர்த்தக முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அருங்காட்சியகம் கண்டறிந்துள்ளது.
குறிப்பிட்ட இந்த சிலைகள் அனைத்தும் முன்னர், ஆலயங்களில் திருவிழாக்களின் போது ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் புனிதப் பொருட்களாக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.





