
ஈரான் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் இடம்பெறும் வன்முறைகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஒரு “குற்றவாளி” என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
“ஈரானுக்கு எதிரான சமீபத்திய கிளர்ச்சியானது சற்று வித்தியாசமானது. ஏனெனில் இதில் அமெரிக்க ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.
” ஈரானில் இடம்பெற்று வரும் பரவலான இரத்தக் களரி மற்றும் அழிவுகளுக்கு வெளிநாடுகளுடன் தொடர்புடைய நபர்களே காரணம் என்று கமேனி கூறினார்.
“இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையவர்கள் பெரும் சேதங்களை விளைவித்ததுடன், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஈரானை உலுக்கி வரும் போராட்டங்களின் போது ஆயிரக்கணக்கானோரைக் கொன்றுள்ளனர்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரானில் நிலவும் அமைதியின்மைக்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, ஈரானின் நீண்டகால புவிசார் அரசியல் எதிரிகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே இந்த ஸ்திரமற்ற நிலையைத் தூண்டிவிடுவதாகவும், களத்தில் போராட்டங்களை வழிநடத்துவதாகவும் ஈரான் கருதுகிறது.
ஈரான் தனது எல்லைகளுக்கு அப்பால் போரை விரிவுபடுத்துவதைத் தவிர்க்கும் அதேவேளையில், இதற்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கமேனி எச்சரித்தார்.
“நாட்டை நாங்கள் போருக்குள் இழுத்துச் செல்ல மாட்டோம், ஆனால் உள்நாட்டு அல்லது சர்வதேச குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிக்க விடமாட்டோம்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.





