
- வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது புதிய வெளியுறவுக் கொள்கையான “டொன்ரோ கோட்பாடு” (Donroe Doctrine) என்பதன் கீழ் பல நாடுகளைத் தனது அடுத்த இலக்குகளாக அடையாளப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1. கிரீன்லாந்து
கிரீன்லாந்து தீவு முழுவதையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அங்கு ரஷ்ய, சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இங்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இராணுவத் தளவாடங்களுக்குத் தேவையான அரிய மண் தாதுக்கள் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரடெரிக் நீல்சன் இதனை ஒரு “கற்பனை” என வர்ணித்ததுடன், சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
2. கொலம்பியா
வெனிசுவேலா நடவடிக்கைக்குப் பிறகு, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை எச்சரித்துள்ள ட்ரம்ப், அந்நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கைக்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கொலம்பியா ஒரு “நோயுற்ற மனிதனால்” வழிநடத்தப்படுவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
3. ஈரான்
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ட்ரம்ப், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் அமெரிக்கா “மிகக் கடுமையாகத் தாக்கும்” என எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
4. மெக்சிக்கோ
மெக்சிக்கோ எல்லை வழியாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையைத் தடுக்க மெக்சிக்கோ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என ட்ரம்ப் சாடியுள்ளார்.
பதவியேற்ற முதல் நாளிலேயே மெக்சிக்கோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றுவதற்கான நிறைவேற்று ஆணையில் அவர் கையெழுத்திட்டார்.
5. கியூபா
வெனிசுவேலாவின் மதுரோ ஆட்சி கவிழ்ந்ததால், அங்கிருந்து கியூபாவிற்கு கிடைத்து வந்த எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
கியூபா பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையத் தயாராக உள்ளதாகவும், அங்கு இராணுவத் தலையீடு தேவையில்லை, தானாகவே வீழ்ந்துவிடும் என்றும் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்





