
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான அறிக்கையை கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கத் தவறிய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
தங்களுடைய சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான அறிக்கைகளைக் கடந்த ஜூன் 30 ஆம் திகதிக்குள் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கத் தவறும் அரச நிறுவனத் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
எனினும், ஜூன் 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான தாமதமான அறிக்கைகளுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
ஆகவே, சொத்து மற்றும் பொறுப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அந்த அறிக்கையை விரைவில் தங்கள் நிறுவனத்திடம் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய அபராத தொகையைக் குறைக்க முடியும் என கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது





