இலங்கைதமிழ் நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அதிரடியாக கைது!

தஞ்சையில் நேற்று (ஞாயிற்று கிழமை) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து, உதயநிதியின் பேச்சு விவகாரத்தில் அவரை கைது செய்ய, நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பு இன்று காலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினரிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றி வரும் தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் கண்டித்து 22 நிமிடங்கள் பேசினேன். அரசு எப்படியெல்லாம் விவசாயிகளை ஏமாற்றுகிறது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மேகேதாட்டுவை எதிர்த்து குரல் கொடுக்க திராணியற்ற, தெம்பில்லாத, பயந்தாங்கொள்ளி அரசாக இருக்கிறது என்றுதான் ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

அதையெல்லாம் மறைக்க இப்போது இந்த பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில், ரீல்ஸ் வெறி முற்றிப்போய் முதல்வரும், அமைச்சர்களும் வாழ்வதாக நேற்று பேசினேன். ஆனால், நான் பேசாத ஒன்றை பேசியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. இதனை சட்டப்படி நான் சந்திப்பேன்.” என்று தெரிவித்துள்ளார். அவரை காவல்துறையினர் தஞ்சை அழைத்துச் செல்கின்றனர்.

ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகே தாட்டு அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் தமிழக முதல்வருக்கு எதிராக எதிராகவும், ஆபாசமாகவும் பேசியதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் போலீஸார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர்.

 

ஐகோர்ட்டில் முறையீடு:

முன்னதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செயப்பட்டது. பகல் 12 மணிக்கு விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்தார். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என காவல்துறையை அறிவுறுத்த அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி அறிவுறுத்தினார்.

மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்கவில்லை என தவெக அரசை குற்றஞ்சாட்டி தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் முதல்வரை அவதூறாக விமர்சித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த விவகாரத்தில், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவே கைது செய்ய வந்துள்ளதாக உதயநிதி தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் ஐகோர்ட் இவ்வாறாக உத்தரவு பிறப்பித்தது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button