
சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 1 முதல் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில்
தொலைத்தொடர்பு சேவைகள்: Sunrise கட்டண உயர்வு
சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Sunrise, ஆகஸ்ட் 1 முதல் தனிநபர் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கான மொபைல் மற்றும் இணைய சந்தா கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
- ஒவ்வொரு சந்தாவிற்கும் மாதாந்திர அடிப்படை கட்டணம் CHF 1.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பல சந்தாக்கள் அல்லது இணைந்த தொகுப்புகளுக்கு, கூடுதல் ஒவ்வொரு சந்தாவுக்கும் CHF 0.75 உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.
- Yallo மற்றும் Lebara பிராண்டுகளின் கட்டணங்களும், திட்டத்தைப் பொறுத்து CHF 0.50 முதல் CHF 2 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
- Swype, CHmobile, முன்பணம் (Prepaid) சேவைகள், வீட்டு பாதுகாப்பு சேவைகள், கூடுதல் சேவைகள் மற்றும் சாதன தவணைத் திட்டங்கள் ஆகியவை இந்த கட்டண உயர்விலிருந்து விலக்கு பெறுகின்றன.
ஓய்வூதியம்
13வது AHV ஓய்வூதியக் கொடுப்பனவு (2026 டிசம்பரில் வழங்கப்படவுள்ளது) தொடர்பாக ஓய்வூதியக் குறைப்பு ஏற்படாமல் தடுக்க, தொழில்சார் முதியோர், உயிர் பிழைத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதன் மூலம், ஓய்வூதிய நிதி மற்றும் AHV ஓய்வூதியம் இணைந்து வழங்கப்படும் போது, ஓய்வூதியம் குறைக்கப்படும் நிலை தவிர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
விமான சேவை
Swiss International Air Lines (SWISS), இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கான விமான சேவைகளை ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல்–ஈரான் பதற்றம் மற்றும் அமெரிக்க தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த சேவை முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
குடியுரிமை விண்ணப்பம்
ஆகஸ்ட் 1 முதல், சாதாரண சுவிஸ் குடியுரிமை (Naturalisation) விண்ணப்ப நடைமுறைகள் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இனிமேல், மாநில குடியேற்ற செயலகம் (SEM) மற்றும் கான்டன் அதிகாரிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் அஞ்சல் மூலம் அல்லாமல், மின்னணு முறையில் நடைபெறும்.
குறைக்கப்பட்ட வேலை நேரக் கொடுப்பனவு
பொருளாதார நெருக்கடி தொடர்வதால், குறைக்கப்பட்ட வேலை நேர (Short-time work) கொடுப்பனவை பெறும் அதிகபட்ச காலத்தை 12 மாதங்களில் இருந்து 24 மாதங்களாக நீட்டித்த நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
இந்த நீட்டிப்பு 2027 ஜனவரி 31 வரை செல்லுபடியாகும்.
அரசின் மதிப்பீட்டின்படி, தொழிலாளர் சந்தையில் உடனடி முன்னேற்றம் எதிர்பார்க்கப்படாததால், இந்த நடவடிக்கை வேலைவாய்ப்புகளை பாதுகாக்கவும், வேலையின்மை அதிகரிப்பதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.






