
2027ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் கடிதங்களை அனுப்புவதற்கான அஞ்சல் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக, அந்நாட்டின் விலை கண்காணிப்பு ஆணையம் (Price Watchdog) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அதேவேளை, 2029ஆம் ஆண்டு இறுதி வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடிதங்களின் எடைப் பிரிவுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி, 50 கிராம் வரை எடையுள்ள கடிதங்கள் மட்டுமே “தரநிலை (Standard)” பிரிவில் சேர்க்கப்படும். தற்போது இந்த வரம்பு 100 கிராம் ஆக உள்ளது. மேலும், இந்த தரநிலைப் பிரிவு விற்பனை வரிக்கு உட்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தரநிலைப் பிரிவில் உள்ள கடிதங்களில் 95%க்கும் அதிகமானவை 50 கிராமிற்குக் குறைவானவை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அஞ்சல் கட்டணங்கள் (2027 முதல்)
முன்னுரிமை அஞ்சல் (Priority Post – A)
- தரநிலை கடிதம்: CHF 1.20 இலிருந்து CHF 1.40 ஆக உயரும்.
- பெரிய கடிதம்: CHF 2.50 இலிருந்து CHF 2.75 ஆக உயரும்.
- 51–100 கிராம் எடையுள்ள நடுத்தர கடிதம்: CHF 1.70 என்ற கட்டணம் மாற்றமின்றி தொடரும்.
சாதாரண அஞ்சல் (Standard Post – B)
- தரநிலை கடிதம்: CHF 1.00 இலிருந்து CHF 1.10 ஆக உயரும்.
- 51–100 கிராம் நடுத்தர கடிதம்: CHF 1.40 இலிருந்து CHF 1.35 ஆக குறையும்.
- பெரிய கடிதம்: CHF 2.00 இலிருந்து CHF 2.25 ஆக உயரும்.
மேலும், சிறிய பொருட்களை கடிதமாக அனுப்புவதற்கு வசதியாக “பருமனான கடிதம் (Bulky Letter)” என்ற புதிய அஞ்சல் வகையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டணம் CHF 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் கட்டணங்கள், சுவிட்சர்லாந்துக்குள் இணையத்தின் மூலம் பார்சல்கள் அனுப்புவதற்கான தள்ளுபடி கட்டணங்கள், அஞ்சல் முகவரி மாற்றம் (Mail Redirection), அஞ்சல் முன்னனுப்பல் (Forwarding) மற்றும் சுங்க அனுமதி (Customs Clearance) சேவைகளுக்கான கட்டணங்கள் ஆகியவற்றில் எந்த உயர்வும் செய்யப்படமாட்டாது என்று Swiss Post அறிவித்துள்ளது.
இந்த புதிய கட்டண ஒப்பந்தம், Swiss Post மற்றும் விலை கண்காணிப்பு ஆணையம் இடையே நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் விளைவாகும்.
மேலும், அனைவருக்கும் அஞ்சல் சேவையை வழங்கும் பொதுச் சேவை (Universal Postal Service) திட்டத்திற்கு நீடித்த நிதி ஆதாரத்தை உறுதி செய்ய அரசியல்வாதிகள் நிலையான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் விலை கண்காணிப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.





