உலகம்

ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை இல்லை ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகும் வரை, பேச்சு நடத்த அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை” என டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானின் இராணுவ திறன்களை குறைக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது 11-வது நாளாக இரவு நேரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்க படைகளின் மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஈரானின் இராணுவ திறன்களை சீர்குலைக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீண்டும் புதிய அணுசக்தி தளத்தை அமைக்க முயற்சித்தால், அதனை அமெரிக்கா தாக்கும் என எச்சரித்துள்ளார்.

“ஈரான் ஒரு புதிய அணுசக்தி தளத்தை மீண்டும் அமைக்க முயற்சித்தால், அமெரிக்கா அந்தத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் தற்போது கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதால், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தைக்கு வர விரும்புவதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் சந்திக்க மிகவும் விரும்புகின்றனர். ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர எப்படியாவது சந்திக்க விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், ஈரான் தரப்பில் இருந்து இந்தக் கருத்துகள் தொடர்பான உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button