இலங்கைஉலகம்

மத்திய கிழக்கு போர் வலயத்துக்குள் சிக்கிய ஸ்ரீலங்கன் விமானங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையங்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 02 விமானங்கள், அந்த வலயத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால் இவ்வாறு போருக்குள் சிக்கியுள்ளன.

 

இதன் காரணமாக, இந்த விமானங்கள் குறிப்பிட்ட வலயத்திற்கு அருகில் உள்ள வான்பரப்பில் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்ததுடன், பின்னர் விமானங்களை பாதுகாப்பாக விமான நிலையங்களில் தரையிறக்குவதற்கு விமானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

இன்று (15) காலையாகும் போது அந்த இரண்டு விமானங்களும் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

 

நேற்று (14) மாலை 5:10 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யூ.எல்.-229 (UL-229) இலக்க விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும், இரவு 6:36 மணிக்கு யூ.எல்.-253 (UL-253) இலக்க விமானம் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தன.

 

A-321 நியோ (A-321neo) ரகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு விமானங்களும் மத்திய கிழக்கு வலயத்தை நெருங்கிய வேளையில், ஈரான் நாட்டின் மூலம் அந்த வலயத்தை நோக்கி தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது வான்பரப்பை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன.

இதனால் அந்த நாடுகளை நோக்கிப் பயணித்த இரண்டு ஸ்ரீலங்கன் விமானங்களும் மீண்டும் கட்டுநாயக்கவிற்கு திரும்புவதற்கான போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால், அந்த வலயத்திற்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுமார் 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் பறந்து கொண்டிருந்தன.

பின்னர் வான்பரப்பு திறக்கப்பட்டதும் அவை பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.

இதே போன்று மேலும் பல வெளிநாட்டு விமானங்களும் இந்த போர்ச் சூழல் காரணமாக தரையிறக்க முடியாமல் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button