இலங்கைபுதிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்;அதிகாரிகள் உயிரிழப்பு! தொடரும் பதற்றம்

இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) மீண்டும் தீவிரமடைந்ததையடுத்து அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய மோதலில் இருவர் உயிரிழந்த நிலையில், இன்று ஏற்பட்ட தொடர் மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

நேற்று மதியம் 1 மணியளவில் விளக்கமறியல் கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வன்முறைக்கு முதற்காரணமாக அமைந்துள்ளதாக தெரியவருகிறது.

நேற்றைய மோதலில் 38 பேர் காயமடைந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் மோதல் மூண்டதால் மேலதிகமாக 35 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சிறைச்சாலையின் சூழல், இன்று மீண்டும் சீர்குலைந்தது. நிலைமையை உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக, சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button