
காசா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 8 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
கான் யூனிஸின் காவல் நிலையத்திற்கு அருகிலும் தற்காலிக முகாமிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் பலியாகினர்.
அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படையினருக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஆயுததாரி ஒருவரைக் கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இதேவேளை, டெய்ர் அல் பாலாஹ் பகுதியில் உள்ள அல் அக்சா மருத்துவமனைக்கு அருகிலுள்ள சமூக சமையலறை மற்றும் ரொட்டி உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை தயாரிப்புப் பிரிவு தளபதியைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக சனிக்கிழமையன்று, ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான இஸு அல்-தின் அல்-ஹடாத் மற்றும் செயல்பாட்டுத் தலைமையக தளபதியான பஹா பரூத் ஆகியோர் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவமும் ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போது இருதரப்புக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதோடு, ஈரான் மீதான குண்டுவீச்சுகளை நிறுத்தியதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளது என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.





